புத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. உலகின் பெரிய மாமேதைகள் அனைவருமே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. இன்றைய நாளில் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்து உள்ளது.
இன்றைய குழந்தைகள் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியபப்படுத்தி புத்தகங்கள் பயில தூண்டுதல் வேண்டும். ஒருவர் பயிலும் சிறந்த புத்தகமே அவரின் சிறந்த நண்பர்களாக திகழ்கின்றன.
நமது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி அறிவை மேம்படுத்த செய்வதில் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. புத்தகங்கள் என்றால் தேவையற்ற புத்தகங்களை வாசிப்பது அல்ல. அறிவியல் நூல்கள், மாமேதைகளின் சரித்திர நூல்கள், சமய நூல்கள் போன்ற அறிவு பசிக்கு தீனி போடும் நூல்களை பயில்தல் வேண்டும்.
வாசிப்பு பழக்கத்தை உண்டாக்கி கொள்வதன் மூலமே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாய் பரிணமிக்க முடியும். புத்தகங்கள் குறைவாக கிடைத்த காலங்களில் பல அறிஞர்கள் உருவாகினாலும் அவர்கள் வாசிப்பதற்கு போதிய நூல்கள் இல்லை. இன்று புத்தகங்கள் நிறைய இருப்பினும் வாசிப்பதற்கு யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மனிதனை அறிவுள்ளவனாய், பூரணத்துவம் பெற்றவனாய் மாற்றுவதில் புத்தகங்கள் மட்டுமே நற்பலனை தருகின்றன.
புத்தக வாசிப்பின் பயன்கள் :
புத்தகங்கள் வாசிப்பதன் வாயிலாக ஒருவரின் சிந்தனை திறன் மேலோங்கும், சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும். எது குறித்தும் எவரிடமும் தயக்கமின்றி பேசமுடியும். தனிமையில் சிக்குண்டு தவிப்பதை தவிர்த்து விடும். மன அழுத்தத்தை குறைக்கிறது. உலகின் பல மொழிகளிலும் எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன. அவை அவரவர் உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் தரப்படுகின்றன. உலகின் பல கலாசார மற்றும் அறிவியல் தகவல்களை அறியவும், இலக்கிய சிந்தனையை விரிவுபடுத்தி கொள்ளவும் புத்தகங்களே பங்களிப்பு செய்கின்றன.
சிறந்த புத்தகத்தை கண்டறிவது :
அன்றாடம் பள்ளி பாடங்களை மனப்பாடம் செய்து எழுதி தேர்வில் மதிப்பெண் பெறுவதை நோக்கமாக கொண்டது. வாழ்க்கையின் நெறிமுறை, நல்லொழுக்கம், நற்குணங்களை நம்முள் விதைப்பவை மட்டுமே நல்ல நூல்கள், எத்தனை முறை படித்தாலும் புதிய ஆர்வத்துடன் பயில துண்டுவது எதுவோ, எடுத்த புத்தகத்தை இடையில் கீழே வைத்துவிடாமல் இருக்க செய்வது எதுவோ, ஒவ்வொரு பக்கமும் நமக்கு தேவையான குறிப்புகளை தேர்ந்தெடுக்க செய்வது எதுவோ அதுவே சிறந்த புத்தகம்.
தினசரி இரவில் நாம் தூங்குவதற்காக படிப்பதல்ல புத்தகம், நம்மை தூங்கவிடாமல் அறிவு விழிப்பை ஏற்படுத்துகிறதோ அதுவே சிறந்த புத்தகம். நல்ல நூல்கள் என்பது படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அதை தேர்ந்தெடுக்கவே நிறைய நேரம் ஆகும். எனவே நன்கு ஆராய்ந்து நமது வாழ்விற்கு வளர்ச்சியும், முன்னேற்றத்தையும் தரும் புத்தகங்களை தேர்ந்தெடுத்து பயில வேண்டும்.